Tuesday 8 January 2013

மன்மோகன் சிங்-மெடிக்கல் செக்கப்

கண்கள்:-  எந்தெந்த மானியத்தையெல்லாம் வெட்டலாம் என்பதையே  
                     பார்த்துக் கொண்டிருக்கிறது

கைகள்:- பத்து நிமிடத்து மேல் பேசினால் மணியடிக்கத் துடிக்கிறது.

காது     :- ஏழைகளின் புலம்பலைக் கேட்பதே இல்லை.

நாக்கு  :- உதடுகளுக்குள் சிறைப்பட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது.

கழித்து:- சோனியா காந்தி சொன்னதற்கெல்லாம் ஆடியதால் தளர்ந்து 
                  கிடக்கிறது.

மூளை:-  மக்களைப் பற்றி சிந்திப்பதை  மறந்து  ரொம்ப நாள்  
                   ஆகிவிட்டது.

கால்கள்:- நினைத்தபோதெல்லாம் வெளிநாடுகளுக்கு ஓடுவது.

பி.பி.:-  அடுத்த  பொதுத் தேர்தலைப்  பற்றி  நினைக்கும்போதெல்லாம் 
               எகிறுகிறது.

இதயம்:- பணக்காரர்களுக்காகவும், தொழிலதிபர்களுக்காகவும்
                  மட்டுமே  துடித்துக்கொண்டிருக்கிறது.

                                                          ( நன்றி- குமுதம்)

Monday 7 January 2013

தேசிய அவமானம்


புது தில்லியில் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளான 23 வயது மருத்துவ மாணவிக்கு ஆதரவாக நடந்த போராட்டக்காரர்களை அமைதிப்படுத்த தொலைக்காட்சியில் தனது  பேச்சில் இது ஒரு தேசிய அவமானம் என்று பிரதம அமைச்சர் மன்மோகன் கூறினார். ஓடும்  பேருந்திலிருந்து நிர்வாணமாக சாலையில் தூக்கி வீசி எறியப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிர் துறந்தார். தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை வாயிலாக உலகுக்கு செய்தி தெரிந்தது.இது போல் தினமும் நடக்கும் நிகழ்வுகள் வெளியில் தெரிவதில்லை.

600 ரூபாய் இருந்தால் 5 பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு போதுமானது என்று கூறிய புதுதில்லி காங்கிரஸ் முதல்வர் க்ஷீலா  தீக்க்ஷித்தின்  அடாவடிப் பேச்சு ஒரு தேசிய அவமானம்  தான். 

9 நாட்கள் இந்தியாவில் இருந்தால் ஒரு நாள் வெளிநாடு சுற்றுப்பயணம்.ஒரு நாள் செலவு ரூபாய் 2 லட்சம். நாட்டில் கழிப்பறை வசதியில்லாத எத்தனையோ மக்கள் இருக்க திட்ட  கமிசன்  அலுவலகத்தில் 35  லட்சம் செலவில் கழிப்பறை வசதி. இவையனைத்தும் மக்கள் வரிப்பணத்தில். ஆடம்பரமாக மக்கள் வரிப்பணத்தை செலவழிக்கும் மாண்டேக் சிங் அலுவாலியா வறுமைக் கோட்டின் உச்ச வரம்பு 32 ரூபாய் என்று நிர்ணயம் செய்து மக்களை இழிவு படுத்திய செயலும் ஒரு தேசிய அவமானம்  தான்.

இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்த நடுவன் அரசு பன்னாட்டு பகாசூர கம்பெனிகளுக்கும், அமெரிக்க ஏகாதிபத்திய அரசுக்கும் சேவகம் செய்யும் செயலும் ஒரு தேசிய அவமானம்  தான்.

ஊழல் மேல் ஊழல் செய்து நாட்டின் வளங்களை கொள்ளையடித்த காங்கிரஸ் கட்சி இன்னும் ஆட்சியில் நீடிப்பதுவும் ஒரு தேசிய அவமானம்  தான்.

பன்னாட்டு மூலதனத்தின் பலாத்காரத்திற்கு நாட்டையே தள்ளிவிட்ட இந்த அரசின் வெட்கக்கேடான செயலும் ஒரு தேசிய அவமானம்  தான்.

மின்சாரப் பற்றாக்குறையால் விவசாயத்தில் சீரழிவு, தொழிற்சாலைகளில் பேரழிவு, வருடா வருடம் சாராய விற்பனை நிர்ணயத்த இலக்கை விட அதிகம் விற்பனையாகி சாதனை மேல் சாதனை. காமராஜர் படிக்கச் சொன்னார். இப்போது உள்ள ஆட்சியாளர்கள் குடிக்கச் சொல்கிறார்கள். இது பெரிய தேசிய அவமானம்.



Tuesday 13 November 2012

தீபாவளியைத் தவிர்ப்போம்


வருடம் தோறும்  வரும் தீபாவளியைப் போல் இந்த வருடமும் வந்து போய்விட்டது. சாமானியன் வயிற்றை, வாயைக் கட்டி சேர்த்து வைத்த பணத்தை கொண்டு தனது குழந்தைகளின் ஆசையைப் பூர்த்தி செய்து, தீபாவளியை வெடி வெடித்து கொண்டாடி மகிழ்ந்து தற்போது அடுத்த வேளை உணவுக்காக உழைக்க தயாராகிவிட்டான்.

தீபாவளியன்று வெடிக்கும் பட்டாசுப் புகை தொழிற்சாலையிலிருந்து 3 நாட்கள் வெளியாகும் புகைக்குச் சமம். பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் உயிர் இழப்புகள் ஏராளம். நமது சிறிது நேர சந்தோசத்திற்காக நாம் வெடிக்கும் பட்டாசு அடுத்தவர் உயிரைப் பறிக்கவும்,அடுத்தவர் சொத்துக்களை அழிக்கவும் காரணமாகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள மக்கள்(குழந்தைத் தொழிலாளியும்) பெறும் கூலி வெறும் 70 ரூபாய் தான். ஏழை, எளிய மக்கள் தங்கள் வயிற்றைக் கழுவ அங்கீகாரம் இல்லாத, பாதுகாப்பு இல்லாத தொழிற்சாலைகளில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம். இதனால் வருடம் தோறும் ஏற்படும் உயிரிழப்புகள் ஏராளம். சமீபத்திய முதலிபட்டி விபத்து ஓர் உதாரணம்.

தீபாவளி என்பது நரகாசுரன் என்ற அரக்கனை அழித்த திருநாள் என்று புராணம் கதை சொல்கிறது.

நம் மனதிலிருக்கும் தீய குணங்களை அகற்றி,  அன்பு, வாய்மை, சகோதரத்துவம் என்ற நல்ல குணங்களை மனதில் கொண்டு வாழ்ந்தால் வாழ்வு சிறக்கும். அப்படி வாழ்ந்தால் நமக்கு தினமும் தீபாவளிதான். இதற்கு தீபாவளி என்றொரு நாள் தேவையில்லை.

சிந்திப்போம்!

Sunday 11 November 2012

ராம்லீலா கேலிக்கூத்து



அண்மையில் புதுதில்லி ராம்லீலா மைதானத்தில் சோனியாவின் காங்கிரஸ் கட்சி சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு பற்றி ஒரு பேரணியை நடத்தியது. 2 லட்சம் பேர் கலந்து கொண்டதாகவும் மிகவும் வெற்றிகரமான பேரணி என்று  தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் சொல்லப்பட்டது. கலந்து கொண்ட மக்களில் எத்துணை பேருக்கு FDI பற்றி தெரியும். ஒரு வேளை உணவுக்கும், அரசியல் புரோக்கர்கள் வீசியெரியும் சில்லறை காசுக்காக கூடிய கூட்டங்களாகவே இருக்க முடியும். இவை அடுத்த தேர்தலில் வாக்குகளாக மாறும் என்று காங்கிரஸ் கனவு காண்கிறது.

91 ம் வருடத்திய தேர்தல் வாக்குறுதியில் 90 சூன் மாதத்தின் விலைக்கு பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று காங்கிரஸ் கட்சி கூறியது. உலக வங்கி மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய விருப்பப்படி மன்மோகன் திட்டமிட்டு நிதி மந்திரியாக ஆக்கப்பட்டார். அவர் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிட்டதில்லை. கொல்லைப்புற வழியாக மேல்சபையின் உறுப்பினரானவர். நிதி மந்திரியாக பதவியேற்றபின் பெட்ரோல், டீசல் விலையை 90 சூன் விலைக்கு குறைக்க முடியாது என்று அறிவித்தை யாரும் மறந்துவிட முடியாது.

அதன்பின் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் அன்னிய முதலாளிகளுக்கு கதவு திறந்து விடப்பட்டது. பொருளாதார சீர்திருத்தால் பாலாறும்,தேனாறும் ஓடும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் முதலாளிகள் பெரும் முதலாளிகளாகவும், ஏழைகள் பிச்சைக்காரர்கள் ஆன கதை தான் நடந்தது.

சில்லறை வர்த்தகம், இன்சூரன்ஸ் மற்றும் பென்சன் ஆகிய வற்றில் அன்னிய முதலீடு கொண்டு வரப்பட்டுள்ளது. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு வந்தால் வேலையில்லா திண்டாட்டம் பெருகும் என்று சொன்ன காங்கிரஸ் இன்று விவசாயிகள் பலன் அடைவார்கள், வேலை வாய்ப்புகள் அதிகமாகும் என்று சொல்வது சாத்தான் ஓதும் வேதம் தான் தவிர வேறு ஒன்றும் இல்லை.

தற்போது உள்ள அரசியல் அமைப்பு ஏழைகள், இளைஞர்கள் ஆகியோருக்கு உகந்ததாக இல்லை. எட்டாக் கனியாக இருக்கிறது. அதைக் களைய பாடுபடுவேன் என்று ராகுல் காந்தி ராம்லீலா மைதானத்தில் கூறியதை சோனியாவைத் தவிற ஏனைய காங்கிரஸ்காரர்களும் நம்பவில்லை.

வால்மார்ட் எருமை........பயிரை மேய்ந்தால் என்ன?
சாணி உனக்கு....... சந்தோசம் எங்களுக்கு...   என்று மன்மோகன் கம்பெனி சொல்வது உங்களுக்குப் புரிகிறதா?


Thursday 27 September 2012

சொந்த செலவில் சூனியம்

வெட்கம் கெட்ட மன்மோகன் அரசு சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, டீசல் விலையேற்றம், எரிவாயு சிலிண்டர்கள் எண்ணிக்கை குறைப்பு ஆகிய மக்கள் விரோத முடிவுகளை திணித்துள்ளது.

எண்ணைய் மான்யம் 1.40 லட்சம் கோடியாக உள்ளது.  இந்த ஆண்டு அது 1.60 லட்சம் கோடியாக அதிகரிக்கும். டீசல் விலை லிட்டருக்கு 17 ரூபாய் ஏற்ற வேண்டும். ஆனால் 5 ரூபாய் தான் ஏற்றியுள்ளோம். மண்ணைண்ணைய்  லிட்டருக்கு 13.86 ரூபாய் குறைவாக கொடுக்கிறோம். எரிவாயு சிலிண்டர் 347 ரூபாய் குறைவாக தருகிறோம். பணம் என்ன மரத்திலா காய்க்கிறது என்று மாமேதை மன்மோகன் கேட்டுள்ளார்.

ஆமாம் மன்மோகன் அவர்களே! பணம் மரத்தில் காய்க்கவில்லை. பெரு முதலாளிகளுக்கும்,கார்ப்போரேட் கம்பெனிகளுக்கும் கொடுக்கும் மானியம் 4.87 லட்சம் கோடி ரூபாய். அதற்கு பணம் மரத்திலா காய்த்தது?.போபர்ஸ் ஊழல், காமன் வெல்த் ஊழல், ஆதர்க்ஷ் ஊழல், 1.76 லட்சம் கோடி  ரூபாய் 2G  அலைக்கற்றை ஊழல், 1.80 லட்சம் கோடி நிலக்கரி ஊழல் ஆகிய வற்றால் கிடைத்த பணம் மரத்திலா காய்த்தது?

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டால் வால் மார்ட் இந்தியாவில் கடை விரிக்கப் போகிறது. ஒரு வால் மார்ட் கடை திறந்தால் 1400 சில்லறை வர்த்தக கடைகள் மூட வேண்டிய சூழல் உருவாகும். மேலும் 5000 பேர் வேலை இழப்பார்கள். 98 விழுக்காடு வர்த்தகம் சில்லறை வர்த்தகத்தின் மூலம் தான் இந்தியாவில் நடக்கிறது. 40 லட்சம் பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். ஆக மொத்தம் 35 லட்சம் பேர் வேலை இழக்க வேண்டிய சூழல் உருவாகும். அன்னிய முதலீட்டால் விவசாயிகள் பலன் பெருவர் என்று சொல்லும் காங்கிரஸ் அரசு 65 வருடங்களாக விவசாயிகளைப் பற்றி எண்ணிப் பார்த்ததுண்டா? ஏன் இந்த திடீர் கரிசனம்?

டீசல் விலையேற்றத்தால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, பேருந்து கட்டணம் உயர்வு மக்களை வாட்டி வதைக்கின்றது. எரிவாயு சிலிண்டர் கட்டுப்பாடு சாதாரண மக்களுக்கு மட்டும் தான். மாண்புமிகுகளுக்கு இது பொருந்தாது.

விவசாயிகள் விளை பொருளுக்கு உற்பத்தி செலவை விட 50 விழுக்காடு வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆனால் அதற்கு இன்னும் முடிவு இல்லை. விவசாயியைத் தவிர அனைவரும் தன் பொருளுக்குக்கான விலையை நிர்ணயம் செய்து கொள்ள முடியும்.

மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டுக் கொண்டு மக்களின் வயிற்றில் அடிக்கின்றன. அடுத்து வருடா வருடம் மின் கட்டணம் உயர இருக்கின்றது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளிடம் வேறு எதை நாம் எதிர்பார்க்க முடியும்.

Tuesday 14 August 2012

ஆகஸ்ட் 15-ஒரு சடங்கு
இந்தியா விடுதலை அடைந்து 65 ஆண்டுகள் ஆகின்றன. 1947 ஆக்ஸ்ட் 15, நள்ளிரவில் விடுதலை அடைந்ததால் தான் என்னவோ இன்னும் இருளில் இருந்து நம்மால் மீள முடியவில்லை.
மொகலாயர்கள் இந்தியாவுக்குள் வந்ததை படையெடுப்பு என்றும், ஆங்கிலேயர்கள் வந்ததை வரவு என்றும் சொல்லப்படுகிறது. மொகலாயர்கள் இந்தியாவுக்குள் வந்து இந்திய பெண்களை மணந்து, இந்திய நாட்டில் ஆட்சி செய்து இந்தியனாகவே வாழ்ந்தார்கள். நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துச் செல்லவில்லை. ஆனால் ஆங்கிலேயர்களோ இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

காந்தி, சுபாக்ஷ் சந்திர போஸ், பக்த் சிங், வ.உ.சி, பாரதி, திருப்பூர் குமரன்,வீரபாண்டிய கட்டபொம்மன், திப்பு சுல்தான்  போன்ற எண்ணற்ற தியாகிகளால் பெற்ற விடுதலையால் மக்கள் சந்தோசப் படும் சூழல் தற்போது இல்லை. நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க இந்திய நாட்டின் பெரு முதலாளிகள், பன்னாட்டு கம்பெனிகள் போன்றோருக்கு ஆட்சியாளர்கள் துணை. அடுத்த ஒரு விடுதலைப் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

சந்தைப் பொருளாதாரத்தை திறந்து விட்ட மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம், அலுவாலியா, ரங்கராஜன் போன்ற பொருளாதார மேதைகள் நாட்டை சீரழிவு பாதை கொண்டு சென்று விட்டனர். பிரேசில், கிரீஸ் போன்ற நாடுகள் சந்தித்த சீரழிவை இந்தியாவும் சந்திக்கிறது.

நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான உண்ண உணவு, உடுக்க உடை, படுக்க இடம் தர இயலாத மன்மோகன் அரசு வறுமைக் கோட்டின் கீழ் உள்ள 60 லட்சம் குடும்பக்களுக்கு இலவச செல்போன் தர இருக்கிறதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்திய எஜமானர்களின் கட்டளையை நிறைவேற்றும் இந்த ஆட்சியாளர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற அடுத்ததொரு சுதந்திரப் போரட்டத்தை ஆரம்பிப்போம்.

விடிவு காலம் நிச்சயம் பிறக்கும்.




Tuesday 7 August 2012

பாதை மாறிய கால்கள்

அண்ணா ஹசாரே குழுவினர் புது தில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் ஏப்ரல் 2011 ல் ஆரம்பித்து வைத்த  உண்ணா நோன்பு போராட்டம் இந்த ஆகஸ்ட் 2012ல்  ஒரு  வழியாக  அவர்களாலே  முற்றுப்  புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

ஊழலுக்கு எதிரான ஒரு வலிமையான ஜன்லோக்பால் மசோதா இயற்றப் படவேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் அண்ணா குழு அமைக்கப் பட்டு ஏப்ரல் 2011 ல் புது தில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் உண்ணா நோன்பு போராட்டம் தொடங்கப் பட்டது. அச்சமயம் இலட்சக் கணக்கான மக்கள் திரண்டு இருந்ததாக தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகள் வாயிலாக பெரிது படுத்தப் பட்ட மாயை திட்டமிட்டு உருவாக்கப் பட்டது.அச்சமயம் உணவு, தண்ணீர், கழிப்பிட வசதி  போன்ற அனைத்து செலவினங்களும் கார்போரேட் கம்பெனிகளிடமிருந்து வசூலிக்கப் பட்ட நன்கொடைகளினால் சாத்தியமாயிற்று. அச்சமயம் புது தில்லியில் குற்றச் செயல்கள் குறைந்து காணப்பட்டதாக காவல் துறை செய்தி.

அதன் பின் மும்பையில் உண்ணா நோன்பு போராட்ட அறிவிப்பு. இதில் 50,000 பேர் கல்ந்து கொள்வார்கள் என தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் வாயிலாக மாயை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. ஆனால் கலந்து கொண்டோர் எண்ணிக்கை வெறும் 4000-5000 பேர் மட்டுமே.

தினமும் ஏறும் விலைவாசி, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற அன்றாட பிரச்சனைகள் ஏராளம். தினமும் அடுத்த வேலை உணவுக்கு வழியின்றி அல்லல் படும் மக்கள் இந்த நாட்டில் ஏராளம். குழு உறுப்பினர்கள் கிரண் பேடி, அரவிந்த் கேஜ்ரிவால் போன்றோருக்கு என்.ஜி.ஒ அமைப்புகள் இருக்கின்றன. அதற்கு வரும் நன்கொடைகளோ ஏராளம்.

ராம்தேவ் பாபா தன் பங்குக்கு கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வர சட்டம் இயற்ற வேண்டும் என்று ஒரு போராட்டத்தை ஆரம்பித்தார். யோகா கற்றுத் தர கட்டணம் பெற்றுக் கொண்டு அளவில்லாத சொத்து சேர்த்துள்ள அவர் தனது சொத்து மதிப்பு எவ்வளவு என்று இதுவரை சொல்லவில்லை.

64 கோடி போபர்ஸ் ஊழல்.அதன் விசாரணைக்காக செலவிடப்பட்டதொகை 300 கோடி. அது போல் 2G அலைக்கற்றை, காமன் வெல்த்,நிலக்கரி,ஆதர்க்ஷ் போன்ற ஊழல்களின் விசாரணை முடிய இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும். இந்த சூழலில் ஜன்லோக்பால் சட்டம் வந்து ஒன்றும் ஆகப்போவது இல்லை. ஊழலை மேல்மட்டத்தில் இருந்து ஒழிக்க முடியாது. கீழ் மட்டத்தில் இருந்து தான் ஒழிக்க முடியும்.

இந்தச் சூழலில் அண்ணா குழு கலைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி ஆரம்பித்து நாட்டைத் திருத்தப் போவதாக ஹசாரே அறிவித்துள்ளார். இந்த குழுவின் தோல்விக்கான காரணங்கள் 1. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு 2.ஹரியானா சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலைப்பாடு 3. அனைத்து மக்கள் பிரச்சனைகளையும் ஒன்று சேர்த்துப் பார்க்காதது.

பாதை மாறிய கால்கள் ஊர் போய் சேர்ந்ததாக வரலாறு இல்லை.